சத்வகுணமுள்ளவர்களுக்குக் கர்மங்கள் செய்யவேண்டிய அவசியமில்லை. கர்மங்கள்
தாமாகவே அவர்களைவிட்டு விலகிவிடுகின்றன. வலிய முயன்றாலும் அவர்களால்
கர்மஞ்செய்ய முடியாது. கடவுள் அவர்களைக் கர்மஞ்செய்ய விடமாட்டார்.
கர்ப்பமாயிருக்கும் மருமகப்பெண், வீட்டு வேலைகளிலிருந்து கொஞ்சங் கொஞ்சமாக
விடுவிக்கப்படுகிறாள்! குழந்தை பிறந்த பிறகு அவள் முழுக் கவனத்தையும்
குழந்தையைப் பராமரிப்பதிலேயே செலுத்தும்படி விடப்படுகிறாள். அதேபோல,
சத்வகுணமுள்ளவர்களது கர்மங்களையும் பகவான் அகற்றிவிடுகின்றார். ஆனால்
சத்வகுணம் வாய்க்கப்பெறாத மக்கள், எல்லா உலகக் கடமைகளையும் கவனிக்க
வேண்டும். ஒரு பணக்காரனுடைய வேலையாள்போலத் தன்னைப் பாவித்துக்கொண்டு,
வீட்டு அலுவல்களையெல்லாம் கவனிக்க வேண்டும். இதுவே கர்மயோகமெனப்படும்.
இவ்வித பரித்யாக புத்தியோடு சகல கர்மங்களையும் புரிந்துகொண்டு, பகவந்
நாமத்தை உச்சரித்து அவனை தியானம் செய்வதிலேயே கர்ம யோகத்தின் சாரமெல்லாம்
அடங்கும்.